சர்ச்சைக்குரிய சக்தியால் வரும் சிக்கல் – மாணிக் விமர்சனம்

நடிகர் மாகாபா ஆனந்த்
நடிகை சூசா குமார்
இயக்குனர் மார்டின்
இசை சி.தரண்குமார்
ஓளிப்பதிவு எம்.ஆர்.பழனிகுமார்
மா.கா.பா. ஆனந்த் பிறக்கும்போதே சர்ச்சைக்குரிய குழந்தையாக பிறக்கிறார். பிறந்த உடனே அவரை கொன்றுவிடும்படி சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் தனது குழந்தை மீதான பாசத்தால் மா.கா.பா.வின் அம்மா உயிர் தப்ப வைக்கிறார்.

இதையடுத்து பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கிறார் மா.கா.பா.ஆனந்த். பாட்டி இறந்த பிறகு, தனது நண்பன் வஸ்தவனுடன் சென்னை வரும் மா.கா.பா. தடைவிதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டியில் திரும்பவும் விளையாட வைத்து கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற சபதம் கொள்கிறார்.

இந்த நிலையில், மா.கா.பா. சாமியார் ஒருவரை சந்திக்க, அவர் மா.கா.பா.வுக்கு தெரியாமல் அவருக்குள் இருக்கும் சக்தி பற்றி சொல்கிறார். அதை பரிசோதித்து பார்க்கும் மா.கா.பா., தாதாவான அருள்தாசிடம் மாட்டிக் கொள்கிறார். அருள்தாஸ், தான் சொல்வதை செய்யாவிட்டால் மா.கா.பா.வின் காதலி, குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.

கடைசியில் தனது சக்தியை வைத்து மா.கா.பா. பணம் சம்பாதித்தாரா? தனது கனவை நிறைவேற்றினாரா? தனது காதலியை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

மா.கா.பா. ஆனந்த் வழக்கமான தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். சூசா குமார் படம் முழுக்க அழகு தேவதையாக வருகிறார். நடிப்பிலும் தேறியிருக்கிறார். மனோபாலா, மதுமிதா ஆகியோரும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார். வில்லன் அருள்தாஸ் அறிமுக காட்சியும் அவர் செய்யும் அலப்பறைகளும் காமெடி கலந்த பயத்தை உண்டு பண்ணுகிறது.

முழு காமெடி படத்தை எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் மார்டின் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு சில இடங்களில் மட்டுமே காமெடி எடுபடுகிறது. மற்றபடி வழக்கமான கதையாகவே காட்சிகள் நகர்கிறது.

சி.தரண்குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

மொத்தத்தில் `மாணிக்’ வீரியமில்லா டானிக்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.