ஹர்காரா – விமர்சனம்

ஒரு மலை கிராமத்தில் தபால்காரராக பணியில் சேருகிறார் காளி வெங்கட். கல்வியில் பின்தங்கிய பொதுமக்கள் அதிகம் வாழும் இந்த கிராமத்தில் இருந்து பணி மாறுதல் கேட்டு போராடுகிறார். இந்நிலையில் உச்சி மலையில் வசிக்கும் ஒரு மூதாட்டிக்கு தபால் கொடுக்க நடந்தே செல்கிறார். அப்போது கிராமமே குலசாமியாக கொண்டாடும் மாதேஸ்வரன் பற்றி கேள்விப்படுகிறார். இவரைப் பற்றி கேள்விபட்டவுடன் தன் முடிவை மாற்றிக்கொள்கிறார் காளி வெங்கட். இறுதியில் யார் அந்த மாதேஸ்வரன்? எதற்காக அவரை குலசாமியாக போற்றி கும்பிட்டு மகிழ்கிறார்கள்? காளி வெங்கட் ஊரை விட்டு போகும் முடிவை மாற்ற காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.  

மலைவாழ் மக்களுக்கு மத்தியில் தபால்காரராக பணிபுரிந்து அறியாமையினால் வாழும் மக்களிடம் அவர் படும் துன்பத்தோடு எதார்த்தமான அவரது நடிப்பு அன்றைய கிராமத்து தபால்காரரை கண்முன் நிறுத்துகிறார். 33 வயதாகியும் திருமணமாகாத ஏக்கத்தில் அங்கிருந்து மாறுதலாகி செல்ல காளி வெங்கட் படும் காமெடி கலந்த கஷ்டம் ரசிக்க வைக்கிறது.  

மலை கிராமத்தில் குல சாமியாக வாழ்ந்து வரும் மாதேஸ்வரன் கதாபாத்திரமாக வாழ்ந்த ராம் அருண் கேஸ்ட்ரோ நடிப்பில் மட்டும் அல்லாது இயக்குனராக படத்தின் மொத்த பொறுப்பையும் தனது தலையில் வைத்து ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து கதை சொல்லி இருக்கிறார்.   150 வருடத்திற்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் ஹர்காராவாக (தபால்காரராக) பணிபுரியும் கதாபாத்திரத்திலும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் அவரது நடிப்பு அவ்வளவு சிறப்பு.

பழங்கால தபால் பணியை காட்சியாக இன்றைய சமுதாயத்திற்கு காண்பித்துள்ளார். மலை கிராமத்தையும், மக்களின் அடிமைதன காட்சிகளையும் படம்பிடித்த பிலிப் சுந்தரின் ஒளிப்பதிவு ரசிப்பு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் அடிமைப்பட்டு கிடந்த நம் மக்கள் அடைந்த துன்பங்களையும் துயரங்களையும் தாங்கி காட்சியாக வரும் ஹர்காரா படம் உணர்வோடு கைதட்டி ரசிக்க வைக்கிறது. அதே நேரம் மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாகவும் அமைந்து இருக்கிறது. மொத்தத்தில் ஹர்காரா – சிறப்பு


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!