‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு விருது கொடுப்பவன் பைத்தியக்காரன்- மன்சூர் அலிகான் ஆதங்கம்

69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க ‘ஜெய்பீம்’, ‘கர்ணன்’, ‘சார்ப்பட்டா பரம்பரை’ போன்ற படங்களுக்கு விருது கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியல் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் நெட்டிசன்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகானிடம் தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது குறைவாக அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தமிழ் திரைப்படங்களுக்கு தான் தேசிய விருது அதிகம் அறிவிக்கப்பட வேண்டும். எல்லா துறையிலும் தமிழை புறக்கணிப்பது போன்று தான் இங்கும் நடந்துள்ளது. மத்திய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் இருப்பது போன்று இருந்தால் விருதுகள் கிடைக்கும். ” என்று பேசினார்.

மேலும், ‘தி காஷ்மீ பைல்ஸ்’ திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, ” கொடுப்பவன் பைத்தியக்காரன். சினிமாவை நேசிப்பவர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள்” என்று பேசினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!