பிரபல கன்னட நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகினர்

கர்நாடகா மாநிலம், நெலமங்களா அருகே உள்ள ஆதர்ஷநகரில் வசித்து வந்தவர் சம்பத் ஜெயராம் (வயது35). இவருக்கு திருமணமாகி ஒருவருடம் ஆகியுள்ளது. இவரது மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பத் ஜெயராம் கன்னட திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. மேலும் இவர் நடித்த அக்னி சாஷி என்ற தொடர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சம்பத் ஜெயராம் டிவி தொடர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாமதமாக வீடுதிரும்பியதாக தெரிகிறது. இதனால் வீட்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் தனது அறையில் சம்பத் ஜெயராம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெலமங்களா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியில் இருந்த சம்பத் ஜெயராம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் இது குறித்து சம்பத்ஜெயராம் தாய் ஜெயம்மா எனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.டிவி நடிகர் சம்பத் ஜெயராம் தற்கொலை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!