அதிகாரியை கொல்ல சதி திட்டம்.. பிரபல நடிகைக்கு தொடர்பு

நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விசாரணை அதிகாரியை கொல்ல சதி திட்டம் தீட்டியதில் காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

கேரளாவில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டம் தீட்டியது தொடர்பாக நடிகர் திலீப் உள்பட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அவரையும் விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில் கேரள ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.


மேலும் இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கு உள்ள தொடர்பை உறுதி செய்யும் வகையில், நடிகர் திலீப்பின் சகோதரி கணவர் சூரஜ் மற்றும் திலீப்பின் நண்பரான சரத் ஆகியோர் போனில் பேசிய ஆடியோ உரையாடல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அந்த உரையாடல் அடங்கிய சி.டி.யை கேரள ஐகோர்ட்டில் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த நாளை (திங்கட்கிழமை) நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!