சீக்கிரம் வந்துருடா பாலு…. நண்பன் எஸ்.பி.பி குறித்து பேசுகையில் கண்கலங்கிய பாரதிராஜா

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி குறித்து இயக்குனர் பாரதிராஜா உருக்கமாக பேசியுள்ளார்.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி. நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா, எஸ்.பி.பி. குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: “எனது நண்பன் பாலு. ஆயிரம் நிலவே வா பாடி உச்சத்துக்கு உயர்ந்தார். எனக்கு பல உதவிகள் செய்துள்ளாய். 16 வயதினிலே படத்தில் தொண்டை சரியில்லாததால் செவ்வந்தி பூமுடிச்ச சின்னாத்தா பாடலை நீ பாட முடியாமல் போனது. அதன்பிறகு பாடிய இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை கேட்டு உலகமே வியந்தது. வைரமுத்து அன்றுதான் உதிக்கிறார். பாலு நீ வந்து விடுவாய். மறுபடியும் வந்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுவாய். பாலு வந்துருடா” என்று கண்ணீர் மல்க பேசி அழுதார் பாரதிராஜா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!