சண்டிமுனி – விமர்சனம்

நடிகர் நட்டு நட்ராஜ்
நடிகை மனிஷா யாதவ்
இயக்குனர் மில்கா எஸ் செல்வகுமார்
இசை ஏ.கே.ரிஷால்சாய்
ஓளிப்பதிவு செந்தில் ராஜகோபால்

மனைவியும் பெற்றோரும் ஒரு விபத்தில் மரணமடைந்த நிலையில், தனியாக வாழ்ந்துவருகிறார் நட்ராஜ். அவர் வசித்து வரும் வீட்டில் பேய் இருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் தகவல் பரப்புகிறார். அப்பகுதி மக்களும் அது உண்மை என்று நம்பத் தொடங்குகின்றனர். ஆனால் நட்ராஜ் இதனை நம்ப மறுக்கிறார்.

இந்த சூழலில் பள்ளியொன்றில் பணியாற்றும் மனிஷா செல்லும் இடமெல்லாம் பேய்கள் விடாது துரத்துகின்றன. இதற்கு தீர்வு காண மனிஷாவின் குடும்பத்தினர் ஒரு சாமியாரைச் சந்திக்கின்றனர். அவர் சொல்லும் தீர்வினால், மனிஷாவும் நட்ராஜும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். காதல் மலர்கிறது. அதுவே, அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கக் காரணமாகிறது.

இதன்பின்னர், நட்ராஜின் கண்களுக்கும் பேய் தென்படத் தொடங்குகிறது. அந்த பேய் மனிஷாவைக் கொல்ல முயற்சிக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடையும் நட்ராஜ், மனிஷாவை விட்டு பேய் விலக என்ன செய்தார்? அந்த பேய் யார் என்பதை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சண்டிமுனி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்ராஜ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கஞ்சனா படத்தில் லாரன்ஸ் செய்வது போல், பேய் தன்னுள் புகுந்ததும் பெண் போல் நட்ராஜ் நடித்துள்ள காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நாயகி மனிஷா யாதவ் தாமரை, ராதிகா என இரு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இரு கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடிப்பில் வித்யாசம் காட்டி இருக்கிறார்.

ஆர்த்தி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார். யோகிபாபு பிளாஷ்பேக் காட்சியில் மட்டும் வந்து தலையை காட்டிவிட்டு செல்கிறார். ஒருவர் மீது கொண்ட அன்பு மரணமடைந்த பின்னும் தொடரும் என்பதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனர் தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது மிகப்பெரிய மைனஸ்.

ஏ.கே.ரிஷால்சாயின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான், பின்னணி இசை இன்னும் மிரட்டலாக கொடுத்திருக்கலாம். செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.

மொத்தத்தில் ‘சண்டிமுனி’ தொய்வு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!