சனம் ஷெட்டி தற்கொலை மிரட்டல் விடுத்தார் – தர்‌ஷன் விளக்கம்

நடிகை சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு பதிலாக பிக்பாஸ் தர்ஷன் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் சனம் ஷெட்டி. மாடலிங்கும் செய்து வருகிறார். ‘கதம் கதம்‘, ‘சதுரம் 2’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் அடுத்து எதிர்வினையாற்று படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

சனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது நடித்தவர் தர்‌ஷன். ‘பிக்பாஸ்’ சீசன் 3ல் பங்கேற்றதால் பிரபலம் ஆனார். இருவரும் திருமணம் செய்வது பிக்பாஸ் நிகழ்ச்சியால் தள்ளி வைக்கப் பட்டதாகவும் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் தர்‌ஷன் திருமணத்துக்கு மறுப்பதாக தெரிவித்து சனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து இன்று தர்‌ஷன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நானும் சனம் ஷெட்டியும் காதலித்தது எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல முயற்சி செய்தது அவர்தான். கடந்த சீசனின் போது கலந்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் சில நிபந்தனை இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

நான் முயற்சி செய்யவே இல்லை. ஒரு விளம்பரத்தை பார்த்து விஜய் டிவியில் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். அவர்கள் அழைத்த அன்று தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. என் வீட்டுக்கு தெரியாமல் தான் நிச்சய தார்த்தம் நடந்தது. படவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று இந்த வி‌ஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நான் பிக்பாஸ் செல்லும் போது எனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகித்துக் கொள்கிறேன் என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னேன். நான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பின் என் தங்கையிடம் பேசி என் சமூகவலைத்தள கணக்கு பாஸ்வேர்டுகளை வாங்கிக் கொண்டார். அதில் அவரிட்ட சில பதிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த பதிவுகள் மூலமாகத்தான் எங்கள் காதல் வெளியில் தெரிய வந்தது.

பிக்பாஸ் முடித்து வந்தபின் அவருக்கு என் மீது பொஸசிவ் அதிகமானது. பிற பெண்களுடன் பேசக்கூடாது என்று பிரச்சினை செய்தார். முக்கியமாக பிக்பாஸ் வீட்டுக்குள் என்னுடன் போட்டியாளர்களாக இருந்த பெண்களுடன் நான் பேசக்கூடாது என்று சந்தேகப்பட்டார்.

அவர் சிங்கப்பூரில் வந்து தங்கியது சேர்ந்து பார்ட்டிக்கு சென்றது எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவருடன் வாழமுடியாது என்று தெரிந்ததால் பிரிந்து விடலாம் என்று சொன்னேன். அதற்கு அவர் மீடியா முன்பு அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

ஆனால் நான் அவர் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் பேசுவதாக சொன்னேன். அவர் இதற்காக இலங்கை வந்து என்னை சந்தித்தார். அப்போது என் அம்மா, என் தங்கை திருமணம் முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூட கூறினார்.

ஆனால் ஒரு கட்டத்தில் சனம் ஷெட்டி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டத் தொடங்கினார். அதன்பிறகு தான் எங்களுக்குள் சண்டை பெரிதானது. என்னை வைத்து படமெடுக்க திட்டமிட்ட தயாரிப்பாளர்களிடம் சென்று எனக்கு வந்த வாய்ப்புகளை தடுக்க முயற்சித்தார். அவர் ரூ. 15 லட்சம் எனக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய். அவர் எனக்கு மூன்றரை லட்சம் பணம் கடனாக கொடுத்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய பின் அதையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

நான் அவர் மீது எந்த வழக்கும் போட மாட்டேன். ஆனால் என் மீது தவறு இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்பேன். அவரை எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். எனவே அவரை அசிங்கபடுத்த விரும்பவில்லை. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். ஒரு பெண்ணை எந்த சூழ்நிலையிலும் அசிங்கபடுத்த மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!