பட அதிபர் சங்கம் சமரச பேச்சுவார்த்தை- மாநாடு படத்தில் நடிப்பாரா சிம்பு?

மாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால் அப்படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாகவும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இது அரசியல் திகில் கதை என்றும் கூறப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில் மாநாடு படத்தை கைவிடுவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எவ்வளவோ இழுத்து பிடித்தும் கால விரயம் ஏற்பட்டதே தவிர படத்தை தொடங்க இயலவில்லை. எனவே சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்படுகிறது” என்றார். சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாடு பட பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதில் சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு தரப்பில் அவரது தாயார் உஷா ராஜேந்தர் கலந்து கொண்டு “குறிப்பிட்ட நேரத்தில் சிம்பு மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து கொடுப்பார்” என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுரேஷ் காமாட்சியிடம் கேட்டபோது, “மாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். மாநாடு படத்தில் சிம்பு நடிக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அது ஏற்கப்பட்டால் படப்பிடிப்பை தொடங்குவோம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!