இதில் அரசியல் இல்லை- பிரதமர் மோடிக்கு நன்றி கூறியது குறித்து விஷால் விளக்கம்

நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘சக்ரா’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் ‘லத்தி’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்கள் உள்ளன.

நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.

அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்புகிறது. அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

இது பற்றி விஷால் கூறியதாவது, “நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப் படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது” என்று கூறினார்.







இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!