அசுரன் – விமர்சனம்

நடிகர் தனுஷ்
நடிகை மஞ்சு வாரியர்
இயக்குனர் வெற்றிமாறன்
இசை ஜிவி.பிரகாஷ்
ஓளிப்பதிவு வேல்ராஜ்

விவசாயியாக இருக்கும் தனுஷ், தனது மனைவி மஞ்சு வாரியர், 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதே ஊரில் இருக்கும் ஆடுகளம் நரேன், தொழிற்சாலை கட்ட தனுஷுக்கு சொந்தமான நிலம் தேவைப்படுகிறது. இதனால் எதாவது பிரச்சனை செய்து தனுஷ் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்.

இந்த பிரச்சனையில் தனுஷின் மூத்த மகன், நரேனை அசிங்கப்படுத்தி விடுகிறான். இதனால், கோபமடைந்த நரேன் மூத்த மகனை கொன்று விடுகிறார். தந்தை தனுஷால் ஒன்று செய்ய முடியாது என்று நினைக்கும் இரண்டாவது மகன் கென் கருணாஸ் நரேனை கொலை செய்கிறான்.

இந்த பிரச்சனை பெருசாக, மூத்த மகனை போல் இரண்டாவது மகனை பலி கொடுக்கக் கூடாது என்று நினைத்து, அசுர ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ். இறுதியில் தன் குடும்பத்தை தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் தனுஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சிவசாமி கதாபாத்திரத்திற்கு நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார். பல காட்சிகளில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். குறிப்பாக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மஞ்சு வாரியர் கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, அட்டகாசம். தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி கிராமத்து பெண்ணாக மனதில் நிற்கிறார்.

மூத்த மகனாக வருபவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டாவது மகனாக வரும் கென் கருணாஸ் நடிப்பில் மிரள வைத்திருக்கிறார். இவரை பார்க்கும் போது சிறு வயது தனுஷை பார்ப்பது போல் இருக்கிறது. 16 வயது சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தொடர்ந்து முகத்தில் தக்கவைக்கிறார். இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஊர் தலைவராக வரும் ஆடுகளம் நரேன், இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி சக்திவேல், தனுஷின் மச்சானாக வரும் பசுபதி, வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி படத்தை இயக்கி இருக்கிறார் வெற்றிமாறன். முழுக்க முழுக்க, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி மக்களுக்கு இடையேயான பிரச்சனையை சொல்லியிருக்கிறார். தாழ்ந்த சாதி குடும்பத்தை சேர்ந்த விவசாயி, பல போராட்டங்களில் தன் குடும்பத்தை எப்படி வழி நடத்தி செல்கிறார் என்பதை திரைக்கதையாக கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்திருக்கிறார் வெற்றிமாறன். தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

ஜிவி.பிரகாஷின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. திரைக்கதை ஓட்டத்திற்கு இவரது பின்னணி இசை பெரிதும் உதவி இருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம்.

மொத்தத்தில் ‘அசுரன்’ அட்டகாசம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!