தியேட்டர் வாங்கினேனா? நயன்தாரா மறுப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா, வட சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி விட்டதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவியது. இந்த தியேட்டர் 1967-ல் திறக்கப்பட்டது. முதல் படமாக பாமா விஜயம் திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் இங்கு திரையிடப்பட்டு உள்ளன.

பழமையான இந்த தியேட்டரை கடந்த 2020-ம் ஆண்டில் மூடி விட்டனர். தற்போது அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா விலைக்கு வாங்கி இருப்பதாகவும், அதை இடித்துவிட்டு மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் கட்டப்போவதாகவும் வலைத்தளத்தில் தகவல் வெளியானது. ஏற்கனவே நயன்தாரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். தற்போது தியேட்டர் தொழிலில் இறங்கப்போகிறார் என்று பேசினர்.

ஆனால் இது உண்மை அல்ல என்று தெரிய வந்துள்ளது. அகஸ்தியா தியேட்டரை வாங்கியதாக வெளியான தகவலை நயன்தாராவும், கணவர் விக்னேஷ் சிவனும் மறுத்துள்ளதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!