நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப், சைலன்ஸ், கபெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வந்தன. அடுத்ததாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தீபாவளி அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் இயக்குனர்களுள் ஒருவரான ஆர்.ஜே.பாலாஜி, ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வந்தார். அப்போது படத்தின் புரமோஷன் பணிகள் இருப்பதால் அடுத்த 20 நாட்கள் வர்ணனை செய்யப் போவது இல்லை என்று கூறினார். இதன்மூலம் மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி ரிலீசாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!