ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!


ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று எம்பாமிங் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே நேரத்தில் அவரது உடல் எப்போது மும்பைக்கு வரும் என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.

துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

ஆனால் நேற்று முன்தினம் அவருக்கு துபாயில் உள்ள ரிஷி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த அறிக்கையை நேற்று கல்ஃப் நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது.

அதில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் அவரது ரத்தத்தில் மதுபானம் இருந்ததாகவும் அறிக்கையில் இருந்தது.


இந்நிலையில் அவரது உடலை மும்பை கொண்டு செல்வதில் தாமதமாகிறது. துபாய் போலீஸிடம் இருந்து இந்த வழக்கு பொது வழக்கறிஞருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த உடற்கூறாய்வில் பொது வழக்கறிஞருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. இன்று ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் செய்யப்படும் என்று தெரிகிறது. ஆனால் அவரது உடல் எப்போது மும்பை வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று துபாயில் உள்ள இந்திய தூதுரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஐக்கிய அரபு எமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஸ்ரீதேவியின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து நாங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.


அதுபோல் அவரது குடும்பத்தினரிடனும் மற்ற நல விரும்பிகளுடனும் தொடர்பில் உள்ளோம். இதுபோன்ற வழக்குகளில் இந்த நடைமுறைகள் முடிய 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும். அவர் இறப்புக்கான காரணத்தை நிபுணர்களிடம் விட்டு விட்டோம்.

எனினும் அவரது உடல் எப்போது இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றார். இதனால் அவரது உடல் மும்பை வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி