கடைசி பெஞ்ச் கார்த்தி-சினிமா விமர்சனம்!!!


நாயகன் பரத் ஊரில் இருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்கிறார். இதே கல்லூரியில் படித்து வரும் நாயகி ருஹானி ஷர்மா சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். ஏழைகளுக்கு இரத்ததானம் செய்வது, கல்லூரியில் படிக்கும் மாணவர்களை இரத்ததானம் செய்ய வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

பரத்துக்கும், ருஹானி ஷர்மாவுக்கும் ஆரம்பத்தில் இருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு குழந்தைக்கு பரத்தின் ரத்தம் தேவைப்படுகிறது. ருஹானி கேட்கும் போது மறுக்கும் பரத், பின்னர் குழந்தைக்கு ரத்தம் கொடுத்து விடுகிறார். பரத் மீது கோபம் இருந்தாலும், அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்படுகிறார்.


பரத்தோ ருஹானியின் காதலை ஏற்காமல் இருக்கிறார். பரத்தை பொருத்தவரை காதல் என்பது திருமணத்திற்கு முன்பு எல்லா விஷயங்களும் நடக்க வேண்டும் என்று எண்ணத்துடன் இருக்கிறார். ஆனால், ருஹானி திருமணத்திற்குப் பிறகுதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஒரு கட்டத்தில் ருஹானியின் காதலை பரத் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், திருமணத்திற்கு முன்பே ருஹானியுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால், இருவருக்குள் மோதல் ஏற்பட்டு பிரிகிறார்கள். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பரத், சாதுவாகவும், ஆக்‌ஷன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். வழக்கமான அவரது பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ருஹானி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு கதாநாயகியாக வரும் அங்கனா ராய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.


தற்போதுள்ள இளைஞர்கள் காதலை எப்படி பார்க்கிறார்கள் ஏன்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரவி பார்கவன். முழுக்க முழுக்க கல்லூரியிலேயே படத்தை எடுத்திருக்கிறார். உண்மையான காதலுக்கும், பொய்யான காதலுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது என்ற கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், திரைக்கதையை போதிய சுவாரஸ்யம் இல்லாமல் உருவாக்கி இருக்கிறார். பரத்தை தவிர மற்றவர்கள் புதுமுகங்கள் என்பதாலும், அவர்களின் டப்பிங் சரியாக எடுபடாததாலும், படத்தை ரசிக்க முடியவில்லை.

அன்பு ராஜேஷ், கே.விஜய் இசையில் பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். முனீர் மாலிக்கின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ மக்கு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!