பிக்பாஸ் நடிகை மரணத்தில் திடீர் திருப்பம்

பிரபல நடிகையும், அரியானா மாநில பா.ஜனதா நிர்வாகியுமான சோனாலி போகாட் (வயது43). இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். சோனாலி தனது அலுவலக ஊழியர்களுடன் கோவாவுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த 23-ந்தேதி அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சோனாலி மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகை சோனாலி உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது.

சோனாலியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக சோனாலியின் சகோதரர் ரிங்கு தாக்கா கோவாவில் உள்ள அன்ஜுனா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் சோனாலியின் சாவில் அவரது உதவியாளர் உள்பட 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது அவர், சுதிர்சங்வான், அவரது நண்பர் சுக்விந்தர் வாசி ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பிறகே உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து சோனாலி யின் உதவியாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சோனாலி குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்று கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை சோனாலி உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.

இந்த காயங்களை கருத்தில் கொண்டு அவர் எப்படி இறந்தார் என்பதை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சோனாலி அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து சோனாலியின் உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்தர் வாசி ஆகிய 2 பேரை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

2019-ம் ஆண்டு அரியானா தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட சோனாலி, அப்போதைய காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோவிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்படித்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!