முத்தையா கண்ணீருடன் தான் கதை சொல்லுவார் – நடிகர் கார்த்தி


இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் கார்த்தி பேசியதாவது “வெற்றி அடிக்கடி கிடைப்பதில்லை. கிடைக்கும்போது கொண்டாடிவிட வேண்டும். பெரிய குடும்பத்தின் வெற்றி இது.
ஒவ்வொரு நாளும் முத்தையா கண்ணீருடன் தான் கதை சொல்வார். விட்டுக் கொடுத்துப் போவதில் தான் குடும்பத்தின் அழகே இருக்கிறது. கூட்டு குடும்பமாக வாழ மிகப்பெரிய சகிப்புத்தன்மை தேவை. நம்மைவிட அவர்கள் முக்கியம் எனக் கருத வேண்டும்.

இந்தப்படம் கிராமத்தில் ஓடும். நகரத்தில் சந்தேகம்தான் என்றார்கள். ஆனால், நகரத்தில் நான் கேட்டே படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. குடும்பங்களின் தியாகத்தால் தான் நாங்கள் வெளியில் வந்து வேலை செய்ய முடிகிறது” என்று பேசினார்

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!