ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்று வரும் – இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ‘ராட்சசன்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யானை’ படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் பெற்றார்.


இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்டரி’ படத்தில் தற்போது அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக செங்குட்டுவன் நடித்துள்ளார். இவர்களுடன் தீபக் செட்டி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜபீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரித்துள்ளது.


பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார். விழாவில் பேசிய வெற்றிமாறன், இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு படம் பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது பிவிஆர் இதனை வெளியிடுகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன். இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள்.


டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!