சல்மான் கானை பயமுறுத்தும் கொரோனா

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான், கொரோனாவால் பயப்பட்டுக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

கொரோனா பரவலால் இந்திய திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் வீட்டில் இருக்கிறார்கள். சிலர் நகரத்துக்கு வெளியே உள்ள பண்ணை வீடுகளில் தங்கி உள்ளனர். இந்தி நடிகர் சல்மான்கானும் தனது சகோதரர் மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி பண்ணை விட்டில் தங்கி இருக்கிறார்.

அங்கிருந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- “நான் சில நாட்கள் இந்த வீட்டில் இருக்கலாம் என்றுதான் வந்தேன். ஆனால் தற்போது இங்கு சிக்கிக்கொண்டு இருக்கிறேன். பயமாக இருக்கிறது. எனது தந்தையை பார்த்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. அவர் வீட்டில் தனியாக இருக்கிறார்.

பயந்தவன் இறந்து போவான் என்று திரைப்படத்தில் வசனம் வரும். அது இந்த சூழ்நிலைக்கு பொருந்தாது என்பதை துணிச்சலாக ஒப்புக்கொள்கிறேன். இந்த நேரத்தில் யாரும் துணிச்சலை வெளிப்படுத்த வேண்டாம். நாங்கள் பயப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்”. இவ்வாறு சல்மான்கான் கூறியுள்ளார்.

திரைப்பட தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு உதவுவதாக சல்மான்கான் ஏற்கனவே அறிவித்து உள்ளார். அதன்படி தனது ராதே படக்குழுவினருக்கு வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!