ஜெய்பீம் படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்திற்கும் போலீசில் புகார்

சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் குறித்து போலிசில் புகார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தற்போது இப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள முருகன் பாடல், தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்துவது போன்று இருப்பதாகவும், எனவே இப்பாடலை படத்தில் இருந்து நீக்கக் கோரியும் அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளனர்.


இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி கூறியது, ‘பாடல் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்ட போதும், இன்று படம் வெளியான பிறகு தான் அதில் முருகனை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதுனால், பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும். படத்தில் நடித்த சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், கடவுள் வாழ்த்து பாடல் எனத் தெரிந்தும் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை அமைத்த பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர இருக்கிறோம். இவ்வழக்கு இந்து கடவுள்களையும், நம்பிக்கைகளையும், இழிவுபடுத்துவோருக்கு ஒரு பாடமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!