இளையராஜாவின் ரீயூனியன்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவின் ரீயூனியன் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவரின் இசைக்கு இன்றளவும் ரசிகர்கள் பட்டாளம் எதிர்ப்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறது. இவரது தம்பி, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர்கள் இருவரின் கூட்டணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே குவிந்திருக்கிறது. இளையராஜாவின் இசையில் பல பாடலுக்கு கங்கை அமரன் பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்.


கங்கை அமரன் இயக்கி இளையராஜா இசையில் உருவான எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் போன்ற பல படங்கள் இன்றளவும் ரசிகர்கள் பேசும் படமாக இருக்கிறது. குறிப்பாக இவர்கள் கூட்டணியில் உருவான செந்தூரப்பூவே செந்தூரப்பூவே, பூவரசம் பூ பூத்தாச்சு, என் இனிய பொன் நிலாவே, காற்றில் எந்தன் கீதம் பாடல்கள் அனைவரையும் இன்றும் முணுமுணுக்க வைத்துக்கொண்டிருக்கிறது.  இதனிடையே இளையராஜாவும், அவரது சகோதரர் கங்கை அமரன் இருவரும் இணைந்து ‘பெரியசாமி சின்னசாமி’ என்ற படத்தை தயாரித்தனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும், இருவரும் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது. 


இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு கங்கை அமரன் தனது சகோதரர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கை அமரன், “இன்று நடந்த சந்திப்பு… இறை அருளுக்கு நன்றி… உறவுகள் தொடர்கதை” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு பாவலர் பிரதர்ஸ் ரீயூனியன் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். பிரேம்ஜி அமரனும் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!