சினிமாவுக்கு வர விரும்பிய பலரை தடுத்திருக்கிறேன் – பா.இரஞ்சித்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா.இரஞ்சித், சினிமாவுக்கு வர விரும்பிய பலரை தடுத்திருக்கிறேன் என்று பட விழாவில் பேசியிருக்கிறார்.

யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். 


இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பா.இரஞ்சித் இசைத்தொகுப்பை வெளியிட, ‘குதிரைவால்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.


அதன்பின் இயக்குனர் பா.இரஞ்சித் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு இது. சினிமாவுல பல வகைகள் இருக்கு, அதை பார்த்து தான் சினிமாவுக்கே நான் வந்தேன். நான் பார்த்த சினிமாவால் பாதிக்கப்பட்டு சினிமா எடுத்தேனா, இந்த சமூகம் அதுபோன்ற ஒரு சினிமாவை எடுக்க விடவில்லை. பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான். ஆனால், அதை ரசித்து மிக சந்தோஷமாக தான் செய்துக்கொண்டிருக்கிறேன். 

அது சமூகத்தில் நிறைய கேள்விகளை உருவாக்குகிறது என்றும் நம்புகிறேன். மற்றபடி என்னுடைய சினிமா விருப்பம் என்பது, ஒரு கலைஞனாக பல விருப்பங்கள் இருக்கு. எனக்கு பொதுவாக தன்னிச்சை படைப்பாளிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்களால் தான் புதிதாக சொல்ல முடியும், ரசிகர்களுடைய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள். அதுபோல தான் குதிரைவால் படத்தை நான் பார்த்தேன். குதிரைவால் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. 


இந்த கதை என்னிடம் சொல்லும் போது, பொருளாதாரா ரீதியாக என்னால் இப்போதைக்கு உதவ முடியாது, மற்றபடி என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொன்னேன். பிறகு அவர்களுடைய நண்பர் விக்னேஷ் தயாரிப்பதாக முன் வந்தார். அப்போது கூட அவரிடம் முழு கதையை சொல்லுங்கள் என்று கூறினேன். ஏன் என்றால் சினிமா நிரந்தர வருமானம் அல்லது லாபம் இல்லாத தொழிலாக இருக்கிறது. சினிமா மிகப்பெரிய லாபம் கொடுக்கும் தொழில்தான் ஆனால் எல்லோருக்கும் லாபம் கொடுக்காது. இதை நான் எல்லோரிடமும் சொல்வதுண்டு. படம் தயாரிக்க வேண்டும் என்று வருபவர்களிடம்நான் இதை சொல்லாமல் இருக்க மாட்டேன். 

ஏன் என்றால் ஆர்வத்தில் சினிமாவுக்கு வருகிறார்கள். பிறகு அதில் இருக்கும் பாதிப்புகளால் அவர்களால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. அதனால், சினிமாவில் இருக்கும் பாதகங்களை நான் முதலில் சொல்வேன், அதை கேட்டுக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறவர்களிடம் சினிமாவில் இருக்கும் சாதகங்களை சொல்வேன். இப்படி நான் சினிமாவுக்கு வர விரும்பிய பலரை தடுத்திருக்கிறேன். அப்படித்தான் விக்னேஷிடம் சினிமாவில் பாதகங்களை கூறினேன். ஆனால், அதை கேட்ட பிறகும் அவர் படம் தயாரிக்க தயாராகவே இருந்தார். 


அவரிம் இந்த படத்தை நாம எடுக்கவில்லை என்றால், வேறு யாராலும் எடுக்க முடியாது, என்று கூறினேன். அதேபோல், ராஜேஷ் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் விக்னேஷிடம் அனைத்து தகவல்களையும் சொல்லுங்கள் என்று கூறினேன். தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இருக்கும் உறவு, படம் முடியும்போது இல்லாமல் போகிறது. இது என் சினிமா பயணத்தில் நான் எதிர்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பிரச்சனைகள் இங்கு இருக்கிறது. நமக்கு இடையே இருப்பவர்களே பிரச்சனையை உருவாக்கி விடுவார்கள். அப்படி ஒரு சூழலில் விக்னேஷும், மனோஜும் படம் ஆரம்பிக்கும் போது எப்படி நட்பாக இருந்தார்களோ இன்று வரை அதே நட்போடு தொடர்வது மிகப்பெரிய விஷயம்’ என்றார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!