ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு – தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம் (வயது 92). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக சண்டை பயிற்சி அமைத்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., ராஜ்குமார், பிரேம்நசீர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து தரப்பு கதாநாயகர்கள் படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்து உள்ள இவர் தற்போது வயது மூப்பின் காரணமாக தனது சொந்த ஊரான குடியாத்தம் தரணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி ஜூடோ ரத்தினம் சென்னையில் திரைப்பட நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். பின்னர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் ஜூடோ ரத்தினத்தின் வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர்கள் அவரின் வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து உடனடியாக குடியாத்தத்தில் உள்ள அவரது மகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதையறிந்து குடியாத்தம் திரும்பிய ஜூடோரத்தினம், வீட்டில் 15 விலை உயர்ந்த பட்டுசேலைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த 2 ரோலக்ஸ் வாட்ச்கள், ரூ.20 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போய் இருப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!