கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – ஸ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் என கூறி உள்ளார்.

தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷாலின் சக்ரா, மாதவனுடன் மாரா ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ரத்தா ஸ்ரீநாத் அளித்த பேட்டி வருமாறு: “எனக்கு நயன்தாரா, சமந்தாவை மிகவும் பிடிக்கும். சினிமா துறை ஆணாதிக்கம் நிறைந்தது. இதில் அவர்கள் தாக்குப்பிடித்து சாதித்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கின்றனர்.

இதுபோல் மேலும் சில நடிகைகளும் சாதிக்கிறார்கள். அவர்களை மாதிரி உயர ஆசைப்படுகிறேன். பெரியவர்கள் நிச்சயம் செய்யும் திருமணங்கள் தோல்வி அடைகிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால் எனக்கு வரப்போகிற கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும். நானும் அவரை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. நிஜ வாழ்க்கையில் நான் துணிச்சல் உள்ளவள். அதற்காக புகைப்பிடிப்பேன். மது அருந்துவேன் என்று நினைக்க வேண்டாம். எவ்வளவு பெரிய பொறுப்பையும் தைரியமாக ஏற்பேன். இதுதான் துணிச்சல் என்பதன் பொருள்”. இவ்வாறு ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!