சாத்தான்குளம் சம்பவம்…. அரசாங்கத்தின் தவறல்ல – பாரதிராஜா அறிக்கை

சாத்தான்குளம் சம்பவம் அரசாங்கத்தின் தவறல்ல என இயக்குனர் பாரதிராஜா தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு, நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி செய்துவிடுகிறார்கள்.

ஜனநாயக கட்டமைப்பில் வாழும் நாம், எப்படி இரு உயிர்கள் வதைபட்டு அவதிக்குள்ளாகி மரணிக்க அனுமதித்துவிட்டோம் என்று புரியவில்லை. அந்த இறப்பின் வலி, வேதனை என்னை உறங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது. அரசு பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வோடு கூட நிற்க வேண்டும். தனிப்பட்ட சில மனிதர்களின் தவறு ஒரு அரசாங்கத்தின் தவறல்ல.

குற்றம் செய்தவர்களை பாரபட்சமின்றி இந்த அரசு கையாள வேண்டும். கொரோனா காலத்தில் மருத்துவர்களுக்கு தூய்மைப் பணியாளருக்கு இல்லாத மன அழுத்தமா? பொருளாதாரம் இழந்து வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு இல்லாத நெருக்கடியா? மன அழுத்தம் யாரேனும் கொண்டிருந்தால் அக்காவலர்கள் விடுப்பில் சென்று மன அமைதி கொள்ளட்டும்.

அகால மரணமடைந்த ஜெயராஜனுக்கும் பென்னிக்ஸுக்கும் மட்டுமல்ல இந்த பேரிடரைப் பார்த்துப் பார்த்துக் கையாளும் அரசுக்கும் பெரும் அநீதி இழைத்துள்ளார்கள் சாத்தான் குள காவல் அதிகாரிகள். அக்கொடூரர்களை மேலும் மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதே நீதியாகப் பார்க்கப்படும். துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகளை அக்கொடியோர் மீது மேற்கொள்ள வேண்டும்”. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!