உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த வைரஸால் இறந்தவர்கள் 2.52 லட்சம். இந்த நோய் தொற்று இன்னும் நீடித்து வருவது அனைவருக்கும் கவலை அளித்துள்ளது.
இந்தியாவில் 46 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 1566 பேர் இறந்துள்ளனர். மீண்டவர்களின் எண்ணிக்கையோ 12847.
இந்தியாவில் கடந்த மார்ச் 23 ல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மே 17 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டினுள் முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன.
இதனால் ரிலீஸாக வேண்டிய படங்களும் நின்று போயின. சினிமாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால வேலையை இழந்த சினிமா ஊழியர்களுக்கு நடிகர்கள், நடிகைகள் பலரும் நிவாரண நிதி வழங்கி உதவி செய்தனர்.
இந்நிலையில் கேரளாவில் மலையாள படங்களின் இறுதிகட்டப்பணிகளுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் அதிகபட்சம் 5 நபர்கள் தேவைப்படும் திரைப்பட பணிகளை தொடங்கலாம்., சமூக விலகல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் ஆகிய நெறிமுறைகளுடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரைப்படத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறியுள்ளார்.
இதனால் சினிமா ஸ்டூடியோக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில்லாத பச்சை மண்டல பகுதியில் டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங் பணிகள் தொடங்கியுள்ளனவாம்.
மேலும் தமிழ் திரையுலகை பொறுத்தவரை சினிமா படப்பிடிப்பு இல்லாமல், ரீ ரெக்கார்டிங், டப்பிங் பணிகளுக்கும், தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கடிதம் அனுப்பியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!