தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் மோதல்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் இம்முறை 3 அணிகள் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. முந்தைய 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் விஷால் தலைவரானார். அதிருப்தி கோஷ்டியினர் சங்க அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தியதால் அரசு தனி அதிகாரியையும், பாரதிராஜா தலைமையில் 8 பேர் கொண்ட ஆலோசனை குழுவையும் நியமித்தது.

வருகிற ஜூன் 30-ந் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வருகிற 7-ந் தேதி பொறுப்பு ஏற்கிறார். மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

டைரக்டர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நிறுத்த முயற்சி நடக்கிறது எனவும் அவர் மறுத்தால் டி.ஜி.தியாகராஜன் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. விஷால் அணி மீண்டும் களம் இறங்குகிறது. 3-வது அணி சார்பில் ராம நாராயணன் மகன் முரளி என்கிற ராமசாமி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

செயலாளர் பதவிக்கு போட்டியிட டி.சிவா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கதிரேசன், ஞானவேல் ராஜா, தேனப்பன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவும் முயற்சிகள் நடக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!