செல்பி எடுத்த நடிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு

செல்பி எடுத்த காரணத்தால் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணிக்கு போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தமிழ், கன்னட படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பெங்களூரு இந்திரா நகரில் சமீபத்தில் சொகுசு காரில் நண்பருடன் சென்று கொண்டிருந்த சஞ்சனா கல்ராணி, வாகனம் ஓட்டியபடியே மொபைல் போனில், ‘செல்பி’ எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய அவருக்கு, போலீசார், ‘நோட்டீஸ்’ அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தனர். சஞ்சனா படப்பிடிப்புக்காக, துபாய் சென்றிருந்ததால் கால அவகாசம் கோரியிருந்தார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவர், போக்குவரத்து போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்று, இணை போலீஸ் கமி‌ஷனர் ரவிகாந்தே கவுடாவை சந்தித்தார். ‘பொறுப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு, நான் செய்திருக்கக்கூடாது’ எனக் கூறி மன்னிப்பு கோரினார். செய்த தவறுக்கு 2,000 ரூபாய் அபராதம் செலுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!