சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தில், நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றி பெறும் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன.

இதுதவிர, ராகவா லாரன்சின் காஞ்சனா, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகமும் வந்துள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே 2 பாகங்களாக வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.

அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்க ஆர்யாவிடமும், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணாவிடமும் பேசி வருகின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!