கவுதம் கார்த்திக்கை நெகிழவைத்த குழந்தைகள்

நடிகர் கவுதம் கார்த்திக் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமான கவுதம் கார்த்திக் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். வை ராஜா வை, இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமவுலி, இந்திரஜித், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கவுதம் கார்த்திக் சமீபத்தில் தேனி மாவட்டத்துக்கு சென்று ரசிகர்களை சந்தித்தார்.

திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். ரசிகர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த ஆசிரமத்தில் எடுத்த ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கவுதம் கார்த்திக் தரையில் உட்கார்ந்து இருக்கிறார்.

அவருக்கு குழந்தைகள் மாறி மாறி வாயில் உணவு ஊட்டி விடுகிறார்கள். வாய் நிறைய உணவுகளை வாங்கி திக்கி திணறி சாப்பிடுகிறார். இந்த வீடியோவில் கவுதம் கார்த்திக், “தங்களுக்காக வாழ்வதற்கு முன்பாக மற்றவர்களுக்கு சேவை செய்ய அந்த குழந்தைகள் கற்றுக்கொடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களை வளர்த்துள்ள விதத்தை பார்த்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!