சைரா நரசிம்மா ரெட்டி – விமர்சனம்

நடிகர் சிரஞ்சீவி
நடிகை நயன்தாரா
இயக்குனர் சுரேந்தர் ரெட்டி
இசை அமித் திரிவேதி
ஓளிப்பதிவு ரத்னவேலு

ஆந்திராவின் கர்னூல் பகுதியில் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி) ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வருகிறார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் வளங்களைக் கண்டு அடிமைப்படுத்தி இருந்த காலநிலையில் சிற்றரசருக்கான அதிகாரம் அவருக்கு இல்லாவிட்டாலும் அவரை அரசராகவே பாவித்து மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். வறட்சி, பசி, பட்டினியில் தவிக்கும் மக்களிடம் ஆங்கிலேயர்கள் வரிகட்ட சொல்லி வற்புறுத்த, அதை எதிர்த்து ஆங்கிலேயர்களின் பகையை சம்பாதிக்கிறார் நரசிம்மா ரெட்டி.

இதனால் அவரை ஆங்கிலேயப் படைகள் குறி வைக்கின்றன. ஆங்கிலேயர்கள் சைரா மீதுள்ள மதிப்பை குலைப்பதற்காக முயல்கிறார்கள். ஆனால் சைராவுடன் மக்கள் துணை நிற்கின்றனர். ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வெல்லும் நோக்கில் தன்னுடன் இருக்கும் மானியக்காரர்கள் என்னும் சிற்றரசர்களை இணைக்கும் முயற்சியில் நரசிம்மா ரெட்டி ஈடுபடுகிறார். முதலில் மறுக்கும் சிற்றரசர்கள் பின்னர் சைராவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பார்த்து நரசிம்மா ரெட்டியுடன் இணைந்து ஆங்கிலேய படைகளுக்கு எதிராகப் போராடுகின்றனர்.

இதற்கிடையே நடக்கும் துரோகத்தால் நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது. அதன் பிறகு நரசிம்மா ரெட்டி என்ன ஆகிறார், அவரின் வீர உணர்வும் சுதந்திர போராட்டமும் என்ன ஆனது, நரசிம்மா ரெட்டிக்கு யாரால் துரோகம் நிகழ்ந்தது? போன்ற கேள்விகளுக்கு படம் விடை தருகிறது. ‘பாகுபலி’க்கு பிறகு தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டு உண்மையில் வாழ்ந்த ஒரு வீரனின் வாழ்க்கையை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி படமாக்கி இருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் தெரிகிறது.

நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி வாழ்ந்து இருக்கிறார். தண்ணீருக்குள் தவம் இருக்கும் அவரது அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார். வீரம், காதல், இரக்கம், விட்டு கொடுத்தல், மக்களை ஒருங்கிணைப்பது என்று கதாபாத்திரத்துக்கு வலு கூட்டி இருக்கிறார். இனி சைரா என்றாலே சிரஞ்சீவி முகம் தான் நினைவுக்கு வரும். அதிலும் கடைசி 20 நிமிட காட்சிகள் சிரஞ்சீவி ரசிகர்களுக்கே உரியது. அரவிந்த்சாமியின் குரல் மட்டும் சற்று பொருந்தாதது போல் தெரிகிறது.

நயன் தாரா, தமன்னா என 2 கதாநாயகிகள். இருவருக்குமே சிரஞ்சீவிக்கு உதவியாக இருக்கும் வேடங்கள். சரியாக செய்து இருக்கிறார்கள். அவர்களது நடிப்புக்கு தீனி போட ஆளுக்கு ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் குருவாக அமிதாப் பாந்தமான நடிப்பால் கவர்கிறார். சிரஞ்சீவியின் எதிரியாக அறிமுகமாகி உற்ற நண்பனாக மாறும் சுதீப்பும், சிரஞ்சீவியின் உயிர்த்தோழனாக விஜய் சேதுபதியும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளார்கள்.

ஜெகபதி பாபு, நாசர், ரவி கிஷன், ரோகிணி ஆகியோருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழில் வசனங்கள் எழுதிய விஜய் பாலாஜிக்கு பாராட்டுகள். கமல்ஹாசனின் குரலும் அனுஷ்காவின் சிறப்பு தோற்றமும் சிறப்பு. 1700களின் காலகட்டத்தை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார். போர்க்கள காட்சிகள் பாகுபலியை நினைவுபடுத்தும் அளவுக்கு பிரம்மாண்டம். அமித் திரிவேதியின் இசையில் டைட்டில் பாடல் உத்வேகம் அளிக்கிறது. ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த பலம். ஸ்ரீகர் பிரசாத் காதல் காட்சிகளுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்.

கலை இயக்கம், உடைகள், மேக்கப், ஒலி வடிவமைப்பு, கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என்று அனைத்திலும் நேர்த்தி பளிச்சிடுகிறது. திரைக்கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வுகள் மட்டுமே படத்தின் பலவீனம். சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை என்றாலே இப்படி தொடங்கி இப்படி முடியும் என்ற நேர்க்கோட்டிலேயே திரைக்கதை பயணிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. வலுவான திரைக்கதை அமைத்து இருந்தால் இன்னொரு பாகுபலியாக அமைந்து இருக்கும்.

மொத்தத்தில் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ வரலாறு மறந்த ஒரு வீரனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!