விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி- விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் மற்ற கதாநாயகர்களுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார். மாதவனுடன் விக்ரம் வேதா படத்திலும், சிம்பு, அரவிந்தசாமி, அருண் விஜய்யுடன் செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார். பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக வந்தார். மலையாளத்தில் ‘மார்கோனி மாதை’ படத்தில் ஜெயராமுடனும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து விஜய்யின் 64-வது படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வந்தனர். அவரும் சம்மதித்துள்ளார்.

இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று டுவிட்டரில் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய்க்கு வில்லனா? நண்பனா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இதில் விஜய் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் ராமேசுவரத்தில் தொடங்க உள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது குழுவினருடன் சென்று படப்பிடிப்பு நடக்கும் இடங்களை நேரில் பார்த்து வருகிறார். வெளிநாட்டில் ஓய்வெடுக்க சென்ற விஜய்யும் சென்னை திரும்பி இருக்கிறார். விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!