ஏகாந்தம் – சினிமா விமர்சனம்


நாயகன் விவாந்த் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது அம்மா அனுபமா குமார் கிராமத்திலேயே தங்கி இயற்கை மருத்துவம் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். விவாந்துக்கு அனுபமாவின் தம்பி தென்னவனின் மகள் நீரஜா தான் மனைவி என்பதை சிறுவயதிலேயே முடிவு செய்துவிடுகிறார்கள்.

அதற்கான நேரம் நெருங்கி வரும்போது நீரஜாவால் ஒரு குழப்பம் ஏற்பட்டு திருமணம் தடைபடுகிறது. அது என்ன குழப்பம்? இருவருக்கும் திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் கதை.

கதாநாயகனாக விவாந்த் இன்னும் நன்றாக நடித்து இருக்கலாம். கதாநாயகியாக வரும் நீரஜா ரசிக்க வைக்கிறார். தனது குண்டு கண்களால், வாயாடியாக பேசும்போது பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போல இருக்கிறது. அனுபமா குமாருக்கு முக்கிய வேடம். அதை உணர்ந்து நிறைய கருத்துகளை கூறி இருக்கிறார்.


படத்தின் பலங்களாக படத்தில் வரும் மலைக் கிராமத்தையும் வெள்ளந்தி மனிதர்களையும் சொல்லலாம். நீரஜா விவாந்த் திருமணம் நிற்பது தான் படத்தின் முக்கிய திருப்பம். ஆனால் அதற்கு நீரஜா சொல்லும் காரணத்தில் வலு இல்லை. மிக எளிமையான ஒரு கதையை எடுத்து, அதற்கு நல்ல கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் உருவாக்கிய இயக்குனர் ஆர்செல் ஆறுமுகம் அந்த கதைக்கு அழுத்தமான திரைக்கதையை உருவாக்க தவறிவிட்டார். வாழ்வியல் படங்களுக்கு வலுவான கதையும் அவசியம் என்பதை உணர்த்தும் படம்.

அழகான கிராமத்தை நம் கண்முன்னே கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் பூபதிக்கு பாராட்டுகள். கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் எங்கேயோ கேட்ட ரகம் என்றாலும் ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக மல்லிய கேளு முல்லைய கேளு பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

மொத்தத்தில் `ஏகாந்தம்’ நல்ல முயற்சி.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.