நான் தமிழ்ப் பொண்ணுனு நினைச்சிடிங்களா..? சின்னத்திரை ஷபானா..!!


பிடிச்ச விஷயத்தைச் செய்யறதுன்னு முடிவுப் பண்ணிட்டா எந்த ரிஸ்க் வேணாலும் எடுக்க முடியும். தனக்குப் பிடிச்ச தமிழ் மொழியில் ஒரு சீரியலாவது பண்ணனும்னு ஆசைப்பட்டு, மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து நடிச்சுட்டு போறாங்க. யாருனு ரொம்ப யோசிக்காதீங்க. அது நான்தான்” எனச் சிரிக்கிறார் ஷபானா. ஜீ தொலைக்காட்சியில் ‘செம்பருத்தி’ சீரியலில் பார்வதியா நம் மனதைக் கொள்ளையடிப்பவர். அழகாய் தமிழில் பேசுகிறார்.

”உங்க சொந்த ஊரே மும்பைதானா?”

”இல்லை. எங்க பூர்வீகம் கேரளா. ஆனால், நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பை. இப்போ தொலைநிலைக் கல்வியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படிச்சுட்டிருக்கேன். என் சின்ன வயசிலேயே அப்பா இறந்துட்டார். அம்மா, நான், தம்பி… இதுதான் என் அழகான குடும்பம்.”

ஷபானா

”அது எப்படி இவ்வளவு அழகா தமிழ்ப் பேசறீங்க?”

”தாய்மொழி மலையாளம் என்பதால், ஆரம்பத்திலேயே கொஞ்சம் தமிழ் தெரியும். மத்தவங்க பேசறதை ஈஸியா புரிஞ்சுப்பேன். சீரியலுக்கு வந்த பிறகு இன்னும் கத்துக்கிட்டேன். ஆனால், இடைவிடாம பேசும்போது கொஞ்சம் திணறுவேன்.”

”மும்பைக் கிளி சென்னைக்குப் பறந்து வந்தது எப்படி?”


”ஒரு மலையாள சீரியலில் நடிச்சேன். அதன் தயாரிப்பு டீம் தமிழ்நாட்டுக்காரங்க. அவங்கமூலம் தமிழ் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. ‘நடிக்க முடியுமா?’னு கேட்டாங்க. வேலைனு வந்துட்டா ரிஸ்க் எடுக்க தயங்கவே கூடாது. உடனடியா ஒத்துகிட்டு தமிழ் சீரியலில் என்ட்ரீ கொடுத்தேன். ஆரம்பத்தில், எங்க வீட்டில் யாருக்கும் நான் நடிக்கிறது பிடிக்கலை. தடுத்துப் பார்த்தாங்க. ஆனால், என் ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு சம்மதிச்சாங்க. முதன்முதலா நான் நடிச்சதைப் பார்த்த அம்மா ரொம்பவே எமோஷனல் ஆகிட்டாங்க.”

ஷபானா

” ‘செம்பருத்தி’ சீரியலில் பாசமான அக்காவா உருகவைக்கறீங்க. நிஜத்தில் எப்படி?”

”அந்த சீரியலில் வெகுளியான பொண்ணாக வீட்டு வேலை பார்க்கிறதுக்காக என் அப்பா, தம்பியோடு பணக்கார வீட்டுக்கு வந்திருக்கேன். அங்கே எனக்கு நடக்கும் விஷயங்களே கதை. நிஜத்திலும் நான் பாசக்காரிதான். என் தம்பியை ரொம்பப் பிடிக்கும். பாசத்தால் அவனுக்கு ஜலதோஷம் பிடிக்கவைப்பேன். சீரியலில் என் தம்பியா நடிக்கிற பையனை என் சொந்தத் தம்பியாகவே பார்க்கிறேன்.”


”உங்க நடிப்பு பற்றி தமிழ் ரசிகர்கள் என்ன சொல்றாங்க?”

”எல்லாரும் என்னைத் தமிழ்நாட்டுப் பெண் என்றே நினைக்கிறாங்க. மும்பைவாசினு சொன்னாலும் நம்பறதில்லே. ரொம்ப நல்லா நடிக்கறதா சொல்லி மனசாரப் பாராட்டுறாங்க. சந்தோஷமா இருக்கு. சீரியல் தவிர, மும்பையில் பிறந்தநாள், கல்யாணம் போன்ற பார்ட்டிகளைத் தொகுத்து வழங்கவும் செய்யறேன். சில நிகழ்ச்சியில் டான்ஸூம் ஆடுவேன். இதை எங்கேயும் கத்துக்கலை. எனக்கு டான்ஸ் ஆடறது பிடிக்கும். பிடிச்ச விஷயத்தை யாரும் கத்துக்கொடுக்கணும்னு இல்லே. ஆர்வம் இருந்தால் போதும். நமக்கு நாமே குரு.”

ஷபானா

”சீரியலில் கலக்கற மாதிரி சினிமாவுக்கும் வருவீங்களா?”

”நடிக்க விருப்பம் இருக்கு. வாய்ப்பு வந்தால் மிஸ் பண்ண மாட்டேன். எனக்கு நடிகை ஷோபனாவை நேரில் பார்த்துப் பேசனும்னு ரொம்ப நாள் ஆசை. அவங்க முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க மாதிரியே ஒரு உணர்வு இருக்கு. அவங்கதான் என் ரோல் மாடல். சின்ன வயசிலிருந்து அவங்க ரசிகையா, உயிரா இருக்கேன். ஒருமுறையாவது அவங்களைப் பார்த்துப் பேசணும்.”

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!