புன்னகையும் சந்தோஷத்தையும் கொடுப்பேன் – விஜய் தேவரகொண்டா

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் முன்னணி நடிகையான சமந்தா உடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘குஷி’ என்ற பெயரில் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தினை தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத் வெளியிடுகின்றனர். இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நாயகன் விஜய் தேவரகொண்டா பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், ” என்னுடைய தமிழ் பையன்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் வணக்கம் . இந்தப் படத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நடித்த குஷி திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும். உங்களை சிரிக்க வைக்கும். ‘பெள்ளி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’.. காலகட்டத்திலிருந்து நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. இந்த திரைப்படம் உங்கள் முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!