பாபா பிளாக் ஷிப் – விமர்சனம்

சுரேஷ் சக்ரவர்த்தி சேலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் பள்ளிகளை நடத்தி வருகிறார். இவரது மறைவுக்குப் பிறகு மகன்கள் இருவரும் இரண்டு பள்ளிகளை ஒன்றாக இணைத்து விடுகிறார்கள். 11-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு பள்ளி மாணவர்களும் ஒரே வகுப்பறையில் படிப்பதால் கடைசி பெஞ்சில் உட்கார இரண்டு குழுவினருக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டையை போட்டியாக மாற்றி மாறி மாறி கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொள்கிறார்கள்.

ஒரு போட்டியில் இரு குழுவினருக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. அப்போது நண்பர்களில் ஒருவர் தற்கொலை செய்ய போவதாக கடிதம் ஒன்று கிடைக்கிறது.   இறுதியில் இரண்டு குழுவில் இருக்கும்  மாணவர்களின் சண்டை என்ன ஆனது? தற்கொலை கடிதம் யார் எழுதினது? கடிதம் எழுதியவரை நண்பர்கள் கண்டு பிடித்தார்களா? தற்கொலையை தடுத்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.  

பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜ் மோகன். முதல் பாதி முழுக்க முழுக்க பள்ளியில் நடக்கும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் நட்பு, அப்பா மகன் பாசம் என திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். மாணவர்களுக்கு கருத்து சொல்லி இருப்பது சிறப்பு.   விக்னேஷ், நரேந்திர பிரசாந்த், அயாஸ்,  அதிர்ச்சி அருண், ஷெரிப், ராம் நிசாந்த் உள்ளிட்ட பலர் மாணவர்களாக நடித்து இருக்கிறார்கள்.

அனைவருக்கும் சம அளவில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தை உணர்ந்து அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். மாணவியாக  வரும் அம்மு அபிராமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போஸ்வெங்கட் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.   சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் பாபா பிளாக் ஷிப் – கலகலப்பு.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!