தண்டட்டி – விமர்சனம்

தேனி மாவட்டத்தில் கிடாரிப்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் மூதாட்டியான ரோகிணி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ரோகிணி காணாமல் போய்விடவே அவரை கண்டுபிடித்து தரும்படி போலீசாரிடம் புகாரளிக்கப்படுகிறது. போலீசான பசுபதி, மூதாட்டி ரோகிணியை தேடிக்கண்டு பிடிக்கிறார். ஆனால், உடல் நலப்பிரச்சினையால் அவர் இறந்து விடுகிறார்.

பின்னர் ரோகிணியின் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. அப்போது பேராசை பிடித்த பிள்ளைகள் தாய் இறந்த கவலை கூட இல்லாமல் அவர் காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால், திடீரென்று அந்த தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. இறுதியில் ரோகிணி எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்? தண்டட்டி எப்படி காணாமல் போனது? பசுபதி தண்டட்டியை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பசுபதி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராம மக்களிடம் மாட்டிக் கொண்டு அலைக்கழிக்கப்படும் காட்சிகள் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெறுகிறது. முழுப்படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார் பசுபதி. மூதாட்டியாக நடித்துள்ள ரோகிணி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

பிணமாக நடித்துள்ள காட்சிகள் கவனத்தை ஈர்க்கிறது. அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா பூவிதா, தீபா சங்கர், ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோர் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர். அறிமுக இயக்குனர் ராம் சங்கையா தண்டட்டி பின்னால் இருக்கும் கதையை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். வலுவான திரைக்கதை மூலம் அவரது உலகிற்கு நம்மையும் அழைத்து செல்கிறார். எதார்த்தமான கிராமத்து கதையை மண் மணம் மாறாமல் இயக்கியுள்ளார்.

ஒரு சில இடங்களில் காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை. கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கிராமத்து எழிலை தன் ஒளிப்பதிவு மூலம் மிகவும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. மொத்தத்தில் தண்டட்டி – மினுக்கிறது


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!