அவர் யார் மனதையும் காயப்படுத்தாதவர். . இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு

இயக்குனர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “அழகிய கண்ணே”. இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்க என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது, பள்ளிக்காலத்திலிருந்தே லியோனி சார் ரசிகன் நான், அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும்.

இயக்குனர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது. மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். நாயகன் சிவா அவரிடம் பேச்சில் தெரியும் பணிவு, அவரின் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைய வேண்டும். படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது. லியோனி சார் யார் மனதையும் காயப்படுத்தாதவர். அவர் மனது போலவே படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!