விஷாலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த லைகா நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது ஐகோர்ட்டு

நடிகர் விஷால் தங்களிடம் வாங்கிய பணத்தை, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் திருப்பித்தரவில்லை என லைகா நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், விஷாலுக்கு எதிராக லைகா படத்தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “நடிகர் விஷால் கடந்த 2016-ம் ஆண்டு மருது படத்தயாரிப்புக்காக மதுரை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடம் ரூ.21.29 கோடி கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பிச்செலுத்த முடியாததால், எங்களிடம் அந்த கடனை அடைக்க அணுகினார்.

அதன்படி நாங்கள் அந்த கடனை அடைத்தோம். இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி எங்களுடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதில், ரூ.21.29 கோடிக்கு 30 சதவீத வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாகவும், துப்பறிவாளன்-2 திரைப்படம் வெளியான பிறகு 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.7 கோடியும், மீதத்தொகையை 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள்ளும் செலுத்தி விடுவதாக உறுதியளித்தார்.

ஆனால், பல முறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் பணத்தை திருப்பித்தரவில்லை. எனவே ரூ.30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137-ஐ வழங்க விஷாலுக்கு உத்தரவிட வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், துப்பறிவாளன்-2 திரைப்படம் வெளியாகும் சமயத்தில் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுப்பதாக விஷால் கூறியுள்ளார். அதை லைகா நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது துப்பறிவாளன்-2 திரைப்படம் வெளியாகவில்லை.

படம் வெளியிடுவதற்கு முன்பே முழு தொகையையும் கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது பொருந்தாது. எனவே, லைகா நிறுவனத்தின் வழக்கை ரூ.5 லட்சம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!