சினிமாவில் பாடல்கள் முக்கியம் – டைரக்டர் பேரரசு

ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்து 100-வது படமாக ‘பிரியமுடன் ப்ரியா’ என்ற படம் தயாராகி உள்ளது. இதில் அசோக், லீசா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜே.சுஜித் டைரக்டு செய்துள்ளார். இந்த பட விழா நிகழ்ச்சியில் டைரக்டர் பேரரசு பங்கேற்று பேசும்போது, “எத்தனை படம் ஹிட் கொடுத்தாலும் ஒரு படம் தோல்வி அடைந்தால், அவன் 2,000 ரூபாய் நோட்டு போல செல்லாக்காசு ஆகி விடுவான். இது தான் சினிமாகாரனின் வாழ்க்கை.

அப்படி ஒரு உலகத்தில் 100 படங்களுக்கு ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருப்பது சாதனை. இளையராஜா எவ்வளவோ பாடல்கள் கொடுத்தார். அது பொற்காலம். கங்கை அமரன், தேவா ஆகியோர் சம்பாதித்த சொத்து என்னவென்றால் அவர்களின் படைப்புகளும், பாடல்களுமே. இதை அவர்கள் அனுபவிக்கிறார்களோ இல்லையோ மக்கள் அனுபவிக்கிறார்கள் சினிமா இசையுடன் மக்கள் பயணிக்கின்றனர். சினிமாவில் பாடல்கள் முக்கியம்.

இப்போதைய காலகட்டத்தில் இயக்குநர்கள் படங்களில் பாடல் வைப்பதில்லை. அது மிகப்பெரிய ஆபத்து. இன்றைய தலைமுறைக்கு இளையராஜா, தேவா, கங்கை அமரன் பாடல்கள் இருக்கிறது. நாளைய தலைமுறைக்கு எதை கொடுப்பார்கள்? பிறக்கும்போது தாலாட்டு, இறக்கும்போது ஒப்பாரி என எல்லா பக்கமும் இசைதான்” என்றார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!