எனக்கு திருமணமா? எஸ்.ஜே.சூர்யா அதிர்ச்சி

அஜித் நடிப்பில் 1999-ல் வெளியான வாலி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் குஷி படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து, பின்னர் அவரே நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார்.

தற்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். தற்போது இவருக்கு வில்லனாக நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது 54 வயதாகும் எஸ்.ஜே.சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.

இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டபோது, “எனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. திருமணம் பற்றி நான் சிந்திக்கவே இல்லை. அதற்கு நேரமும் இல்லை. இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை. இப்போது எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது” என்றார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!