நாஞ்சில் விஜயன் என்னை உருட்டுக்கட்டையால் தாக்கினார் – சூர்யா தேவி போலீசில் புகார்

நாஞ்சில் விஜயன் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக சூர்யா தேவி போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் பிரபலம். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார். இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாக பேசி, பின்னர் வனிதாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் புது பிரச்சினை உருவாகியுள்ளது.

சூர்யா தேவி தான் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியதாக நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவுடிகள் தாக்கிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து சூர்யா தேவி மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி புகார் அளித்துள்ளார். நேற்று மாலை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தலையில் காயங்களுடன் சூர்யாதேவி வந்தார். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது: நானும் நாஞ்சில் விஜயனும் ஏறத்தாழ 6 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தோம்.

நடிகை வனிதாவிற்கு எதிராக யூ டியூப்பில் கருத்து பதிவிட்டபோது தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் விஜயன் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதாவுடன் சமரசம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் இதுபற்றி கேட்பதற்காக கடந்த 11-ந் தேதி இரவு நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் பேசிய நாஞ்சில் விஜயன் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் எனது மண்டை உடைந்தது.

இதை தடுத்த எனது நண்பர் அப்புவையும் கத்தியால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினோம். இந்த நிலையில் நான் 3 பேருடன் வந்து நாஞ்சில் விஜயன் மற்றும் துணை நடிகை ஷீபாவை தாக்கிவிட்டு தப்பி சென்றதாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று நாஞ்சில் விஜயன் நாடகம் நடத்தியுள்ளார்.

ஆகவே என்னையும் எனது நண்பர் அப்புவையும் தாக்கிய நாஞ்சில் விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். நாஞ்சில் விஜயன் இதுவரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது செல்போன் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!