விரூபாக்ஷா – விமர்சனம்

திடீரென கிராமத்தில் மர்மமான முறையில் குழந்தைகள் இறக்கிறார்கள், இதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக குடியேறி மந்திர தந்திர ஆராய்ச்சிகள் செய்யும் கமல் காமராஜ்தான் என்று ஊர்மக்கள் கருதிகின்றனர். இதனால் அவரை மனைவியோடு சேர்த்து எரித்துக் கொல்கின்றனர். இறந்த தம்பதியரின் மகன் அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்படுகிறான்.   பல வருடங்கள் கடந்த பிறகு அந்த கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்காக சாய்தரம் தேஜ் வருகிறார்.

அதன்பின்னர் ஊர் தலைவரின் மகள் சம்யுக்தா மீது சாய்தரமுக்கு காதல் மலர்கிறது. அப்போது ஒருவர் கோயில் கருவறைக்குள் ரத்தம் கக்கி இறந்து விடுகிறார். இதனால் கோயிலின் புனித தன்மையை காக்க எட்டு நாட்களுக்கு உள்ளூர் மக்கள் வெளியூர் செல்லவும், வெளியூர் மக்கள் உள்ளூர் வரவும் பூசாரி தடைபோடுகிறார்.   அதன்பிறகு சிலர் மர்மமான முறையில் இறக்க, சம்யுக்தாவையும் ஊர் மக்களையும் ஆபத்து சூழ்கிறது. இறுதியில் தொடர் மரணங்களுக்கு என்ன காரணம்? சம்யுக்தாவை சாய்தரம் தேஜ்ஜால் காப்பாற்ற முடிந்ததா? என்பது மீதிக்கதை.  

ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் காட்சிகளில் இயல்பான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார் சாய்தரம் தேஜ். சம்யுக்தா முதல் பாதியில் அப்பாவி பெண்ணாகவும், இரண்டாவது பாதியில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார்.   ஊர் தலைவராக வரும் ராஜீவ் கனக்கலா, மருத்துவராக வரும் பிரம்மாஜி, அகோரியாக வரும் அஜய், சுனில், பூசாரியாக வரும் சாய் சந்த், பைரவாவாக வரும் ரவிகிருஷ்ணா என படத்தில் தோன்றும் பல கதாப்பாத்திரங்கள் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.  

ரசிகர்களை முழுக்க திகிலில் ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் வர்மா. கிளைமாக்சில் உருகி உருகி பேசும் காதல் வசனங்கள் நெருடலாக இருந்தாலும் படத்தை பெரிதாக பாதிக்கவில்லை.   ஒளிப்பதிவாளர் சம்ஹத் சைனுதீனின் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. திகில் கலந்த கதைக்கு அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை சிறப்பு. மொத்தத்தில் விரூபாக்ஷா – ஸ்வாரசியம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!