சினிமாவில் நாயகிகளுக்கு மதிப்பு தருவது இல்லை – நடிகை பூமிகா

தமிழில் விஜய் ஜோடியாக பத்ரி, சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் மற்றும் ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூமிகா தெலுங்கு, இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.

பூமிகா அளித்துள்ள பேட்டியில், ”நிஜ வாழ்க்கையில் நடிகர் நடிகைகளின் காதல் விஷயங்களில் வயது வித்தியாசம் குறித்து சர்ச்சையாக பேசுவதை அடிக்கடி கேட்கிறோம். வயது அதிகமான மலைக்கா அரோரா வயது குறைந்த அர்ஜுன் கபூரை காதலிப்பது, பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் போன்றவற்றை மக்கள் ஏற்காமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. அது அவர்களின் வாழ்க்கை. அதிக வயதுடைய ஆண் வயது குறைந்த பெண்ணை காதலிக்கும்போது பெண்களும் வயது அதிகமான ஆண்களை காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

சினிமாவில் கதாநாயகன் தன்னை விட பாதி வயது குறைந்த நடிகையோடு ஜோடியாக நடிக்கிறார். இதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதுபோல் நடிகைகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா துறையில் நாயகிகளுக்கு மதிப்பு தருவது இல்லை. காலம் மாறிய பிறகும் ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வெப் தொடர்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் சினிமாவில் பழைய முறையே உள்ளது” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!