“சிவாஜி நடிப்பிற்கு என் நடிப்பு 10 சதவீதம் கூட ஈடாகாது” – ஜெயம் ரவி

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டும் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று பெங்களூரில் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஜெயம் ரவி பேசியதாவது, நான் படங்களில் நல்லவனாக நடிக்க விருப்பமில்லை. ஏனெனில் ஒரே மாதிரியான நடிப்பை மட்டும் வெளிபடுத்த முடியும் .ஆனால் கெட்டவனாக நடித்தால் தனது நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தலாம். குறிப்பாக இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க மணி சார் நிறைய திறன்களை சொல்லி தந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக யாரையும் பார்த்து நான் காப்பி அடிக்க விருப்பமில்லை.

பல வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்பு அந்த படத்தை நான் பார்க்கவில்லை. ஒரு வேளை அந்த படத்தை நான் பார்த்திருந்தால் அவரின் நடிப்பின் தாக்கம் என்னுள் வந்திருக்கும், என் நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடாகாது. என்னால் எப்படி நடிக்க முடியுமோ அப்படி நடித்தேன். மணி சாரை நம்புனேன், கல்கியை நம்பினேன், கடவுளை நம்பினேன். என்னுடைய வழியில் நான் சிறப்பாக நடித்து முடித்துள்ளேன் என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!