நம்முடைய கதைகள் உலக அளவில் கொண்டாடப்படுகிறது – வெற்றிமாறன்

2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, அசூரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்றார்.

தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது, “கலைக்கு மொழி இல்லை என்று சொல்வார்கள், ஆனால் கலைக்கு நிச்சயமாக மொழி இருக்கிறது. கலை அதன் எல்லைகளை கடந்து போகும்.

யாருமே அவர்கள் மண்ணிற்கு வெளியே உள்ள மக்களை குறித்து வைத்து படம் எடுப்பதில்லை. நம்முடைய கதைகளை நம் மக்களுக்காக சொல்லும் போது அது உணர்வாக உலக அளவில் ஏற்கப்பட்டு நல்ல வரவேற்பை பெறுகிறது. நம்முடைய அடையாளங்கள், தனித்துவங்கள், பெருமைகள் கொண்ட மண் சார்ந்த கதைகளை படமாக எடுப்பதால் தான் தென்னிந்திய படங்களுக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தான் கடந்த சில ஆண்டுகளாக வெற்றியை பெற்றுள்ளன” என்று பேசினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!