சொப்பன சுந்தரி – விமர்சனம்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். அம்மா (தீபா ஷங்கர்), படுத்த படுகையான அப்பா, ஊமை அக்கா (லட்சுமி பிரியா) ஆகியோரை வைத்துக் கொண்டு சுயமரியாதையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் மூத்த அண்ணன் (கருணாகரன்) குடும்பத்தை கைவிடவே முழு பொறுப்பையும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் இவருக்கு நகைக்கடை குலுக்கலில் பம்பர் பரிசாக கார் ஒன்று கிடைக்கிறது. இந்த காரை வைத்து கடனை அடைத்து விடலாம் என்ற சந்தோஷத்தில் அவர் கனவு கோட்டைகளை கட்டுகிறார்.

அப்போது லட்சுமி பிரியாவை பெண் பார்க்க வந்தவர்கள் கல்யாணத்தை நாங்களே நடத்துகிறோம் காரை என் பையனுக்கு வரதட்சணையாக கொடுங்கள் என்று சம்மதம் பேசவே ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பமும் ஒத்துக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் கருணாகரன் கார் எனக்கு தான் சொந்தம் என்று பிரச்சினை செய்கிறார். இந்த பிரச்சினை ஒரு கட்டத்தில் போலீஸ் விசாரிக்கும் அளவிற்கு செல்கிறது. அப்போது போலீசார் நகைக்கடையில் விசாரிக்க அவர்கள் பில் யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு தான் கார் என்று கூறிவிடுகின்றனர். இறுதியில், கார் யார் கையில் கிடைக்கிறது..? அண்ணன் ஏன் காரை அபகரிக்க முயற்சித்தான்..? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிடில் கிளாஸ் கதாபாத்திரத்தை மிகவும் அழகாக கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். கார் கிடைத்த சந்தோஷத்தில் குதிக்கும் இடத்திலும், தனது அக்காவிற்கு ஒன்றும் நேர்ந்துவிடக்கூடாது என அவரை காப்பாற்ற போராடும் இடத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். அக்காவாக வரும் லஷ்மி பிரியா அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருந்தாலும் அவரை நினைவு கொள்ளும் அளவிற்கு கதாபாத்திரம் இல்லாமல் போனது ஏமாற்றம்.

தீபா மற்றும் கருணாகரன் தங்களுக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். சிம்பிளான கதையை எப்போதும் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக காமெடி ஜானரில் கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். ஆனால் அது பல இடங்களில் ஒர்கவுட் ஆனாலும் சில இடங்களில் செட்டாகாமல் போனது வருத்தமே . அஜ்மலின் பின்னணி இசை படத்தை தாங்கி பிடித்துள்ளது. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜ கோபாலின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது. மொத்தத்தில் சொப்பன சுந்தரி – பார்க்கலாம்

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!