எல்லை மீறிய ஆபாசம்: ஓ.டி.டி. தொடர்களுக்கு தணிக்கை தேவை – நடிகை விஜயசாந்தி

ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் எல்லை மீறி இருப்பதாகவும் அவற்றுக்கு தணிக்கை வேண்டும் என்றும் பல தரப்பிலும் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ஆகியோர் நடித்து ஓ.டி.டி.யில் வெளியான ராணா நாயுடு வெப் தொடரில் எல்லை மீறிய ஆபாச காட்சிகள், படுக்கை அறை, இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. வெங்கடேஷ், ராணா ஆகியோர் இதுபோன்ற தொடர்களில் நடிக்கலாமா என்றும் பலர் கண்டித்து உள்ளனர்.

நடிகை விஜயசாந்தியும் விமர்சித்து உள்ளார். அவர் கூறும்போது, “சமீபத்தில் வெளியான வெப் தொடரில் ஆபாச காட்சிகள் உள்ளன. ஓ.டி.டி.யில் வரும் வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் அதிகமாகி வருகின்றன. இதனால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை உணர்ந்து படம் எடுக்க வேண்டும். ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களில் நடிக்கும் நடிகர்-நடிகைகளும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பாதித்தால் போதும் என்ற நோக்கம் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் வைத்திருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும். ஓ.டி.டி.யில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு தணிக்கை வேண்டும் என்பது புரிகிறது” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!