திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தள்ளி வைக்கும் யோகிபாபு

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடிகர் யோகிபாபு தள்ளி வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு கடந்த பிப்ரவரி 5-ந்தேதி மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணத்துக்கு யாரையும் அழைக்க முடியவில்லை என்றும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு எல்லோரையும் அழைப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து அடுத்த மாதம் (எப்ரல்) சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து அனைவருக்கும் திருமண வரவேற்பு அழைப்பிதழை கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் கொரோனாவால் நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மலையாள நடிகர் மணிகண்டன், நடிகை உத்ரா உண்ணி, தெலுங்கு நடிகர் நிதின் ஆகியோர் திருமணங்களை தள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில் யோகிபாபு, “ஏப்ரல் 9-ந்தேதி எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திட்டமிட்டு இருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் அது நடக்குமா? என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். வரவேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைப்பது குறித்து அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!