ரஜினிகாந்த் ஆசியுடன் தொடங்கிய ‘நயன்தாரா-75’ படத்தின் படப்பிடிப்பு

இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா பல மொழியில் அதிக படங்களில் நடித்து நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் நயன்தராவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்து படங்களை துவங்கும் நிலைமை உள்ளது. இவர் தற்போது ‘இறைவன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் இந்தியில் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார்.

நயன்தாராவின் 75-வது படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் நயன்தாரா -75 படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!